மாநகர பஸ்களை நிறுத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றவேண்டும் என்று டிரைவர் கண்டக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அனைத்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் தினமும் பஸ்களை இயக்கி வருகின்றது. ஆனால் பஸ் டிரைவர்கள் சாலையின் இடது ஓரமாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச்சென்று பேருந்தில் ஏறும் சூழல் ஏற்படுகின்றது.
இதனால் பல பயணிகள் கீழே விழுந்து காயம் அடையும் நிலையும், சிலநேரங்களில் மரணங்களையும் ஏற்படுத்துகின்றது. எனவே அனைத்து டிரைவர் கண்டக்டர்கள் தங்களின் பணியின்போது பஸ்சை உரிய பஸ் நிறுத்தத்தில் உள்ள பஸ் பே இடத்தில் நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்லவேண்டும். பஸ்களை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தக்கூடாது. எனவே இதுபற்றி டிரைவர் கண்டக்டரிடம் அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள் அறிவுறுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.