ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 31 பெண்களை தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற இடைத்தரகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வடமாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். அதில் சில வட மாநிலத் தொழிலாளர்களை இடைத்தரகர்கள் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கொத்தடிமைகளாக இங்கு விட்டுச் செல்கிறார்கள்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கின்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட பெண்களை தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு அழைத்து வருவதற்கு அம்மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி 9 சிறுமிகள் உட்பட 31 பெண்களை ஒரு பேருந்து மூலமாக ஏற்றிக் கொண்டு தமிழகத்தை நோக்கி அவர் புறப்பட்டுள்ளார். அந்தப் பேருந்தை வழிமறித்த காவல்துறையினர், அவரை விசாரணை செய்தனர். அப்போது இடைத்தரகர், பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்வதற்கான எந்த ஒரு ஆவணங்களும் அவரிடம் இல்லை என்று போலீஸ் கண்டறிந்தனர்.
அது மட்டுமன்றி அந்தப் பெண்களுக்கு மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி, அவர்களை தமிழகத்திற்கு கடத்த முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இடைத்தரகர், பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அந்த இடைத்தரகர் அழைத்து வந்த 31 பெண்களையும் பாதுகாப்பாக மீட்டு போலீசார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். கைது செய்த மூன்று பேரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.