தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் தேதி) நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது 65 – 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிலையில் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. 396 வீரர்கள் 12 குழுக்களாக 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு (NDRF) விரைந்துள்ளது.