திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ரேணுகா தேவி என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த ஹைகோர்ட் ஒரு வாரத்திற்குள் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலர் நாசருதீனிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கை மூலம் பள்ளி மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்தது உறுதியானது. இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வன் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகுவை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.