Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம்”…. வழங்க மறுத்த தனியார் பள்ளி….. ஐகோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…..!!!!

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

ஏழை,எளிய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும்.  கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் இலவசமாக பாடபுத்தகங்கள் சீருடைகள் வழங்க வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு விதிகள் கொண்டு வரப்பட்டது. இந்த விதிகளை ரத்து செய்து மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அரசே வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் சடகோபன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி முனீஸ்வரி மற்றும் மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் தான் பாடபுத்தகங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் என கூறவில்லை எனவும், 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகளால் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த விதிகளால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் சார்பில் வழக்கு தொடர வில்லை எனவும், தாளாளர் என்ற அடிப்படையில் தனி நபர் இந்த வழக்கை தாக்கல் செய்ய எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் விதிகள் கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகள் தாமதமாக வழக்கு தொடர்வதற்கான நியாயமான காரணங்களை மனுவில் மனுதாரர் கூறவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |