மாடுகளை குளிப்பாட்டி கொண்டிருந்த மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலைமணி தெற்கு தெருவில் கூடலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு ராம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராம்குமார் தனது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை குளிபாட்டுவதற்காக அப்பகுதியிலுள்ள சப்பானி குளத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து மாடுகளை குளத்தில் இறங்கி குளிப்பாட்டி கொண்டிருக்கும்போது பசுமாடு திடீரென மிரண்டுள்ளது. இதனால் பதறிய ராம்குமார் குளத்தில் ஆழமான பகுதியில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் ராம்குமாருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளர். இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து அவரை காப்பாற்றும்படி கேட்டுள்ளனர். இதனைதொடர்ந்து சிலர் குளத்தில் இறங்கி தேடியபோது ராம்குமார் கிடைக்கவில்லை.
எனவே உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ராம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ராம்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போடி தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ராம்குமாரின் உடலை மீட்டு உடற்கூராவிற்க்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.