இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தன்னுடைய 97வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரின் பிறந்தநாளையொட்டி சென்னை தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று அவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது ட்விட்டர் “பக்கத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறைக்குச் சென்ற ஒப்பற்ற பெருந்தியாகி, மண்ணின் நலனுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது களத்தில் நிற்கும் மாசற்ற மண்ணுரிமை போராளி, பொதுவுடமை தத்துவத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு வாழும் மாமனிதர். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், போற்றுதலுக்குரிய அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.