மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. ‘சிவ’ என்ற சொல்லே ‘மங்களம்’ என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹாசிவராத்திரியான இன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். மாதந்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. சிவப்பெருமானுக்கு உகந்த தினமான இந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சிவப்பெருமானின் பஞ்சபூத தலங்களான திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் எழுந்தருளியுள்ள சிவப்பெருமானுக்கும், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்பட அனைத்து சைவத் திருத்தலங்களிலும் நடைபெற்று வரும் நான்கு ஜாம பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
அதேபோல வடமாநிலங்களில், காசி விஸ்வநாதர் ஆலயம், மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள திரும்பாகேஸ்வர் ஆலயம், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள சிவன் கோவில், உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அமைந்துள்ள சிவாலயம், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள கௌரி சங்கர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் மஹாசிவராத்திரி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.