அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் எஸ்.எல்.எஸ் நகரில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரதீப் என்பவர் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்க்கும் தன்யா என்பவரை தனக்கு தெரியும் எனவும், அவரிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவார் எனவும் முருகனிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய முருகன் தனக்கும், தனது தம்பியான வெள்ளை பாண்டி என்பவருக்கும் அரசு வேலை வாங்கி தர வேண்டும் என கேட்டு 3 தவணைகளாக 15 லட்ச ரூபாய் பணத்தை பிரதீப் மற்றும் தன்யாவிடம் கொடுத்துள்ளார்.
அதன்பின் பல நாட்கள் ஆகியும் அவர்கள் வேலை வாங்கி தராததால் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு முருகன் கேட்டுள்ளார். ஆனாலும் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காததால் முருகன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன்யா டாக்டராக பணி புரியவில்லை என்பதும், கேரள மாநிலத்தை சேர்ந்த தன்யா சிங்காநல்லூரில் தனது 2 குழந்தைகளுடன் வசிப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தன்யாவிடம் பிரதீப் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இருவரும் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.