சிகிச்சை பெற்று வந்த மனைவியை கொன்று விட்டார்கள் என்று கூறி மருத்துவமனை வளாகத்தை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மராட்டியத்தில் உள்ள நாக்பூரில் 29 வயதான ஒரு பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றவே அவரது உறவினர்களும் அவரும் சேர்ந்து கையில் வைத்திருந்த பெட்ரோலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மேஜையில் ஊற்றி தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . இதையடுத்து அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை கைது செய்தனர்.
ஆனால் அவரது உறவினர்கள் அந்த மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் அப்பெண் உயிரிழந்தார் என்றும் கூறுகின்றனர். மேலும் 1.5 லட்சம் ரூபாய் பணத்தை கட்டினால் மட்டுமே பெண்ணின் உடலை தருவோம் என்றும் கூறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே வாக்குவாதத்தில் தீவைப்பு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.