அமராவதி வனப்பகுதியில் முதியவர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அமராவதி வனப்பகுதியில் வனக்காப்பாளர் குருமூர்த்தி, வனக்காவலர் ஜோர்ஜ்குட்டி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மரத்தில் முதியவர் ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் உயிரிழந்த முதியவர் கூடலூரை சேர்ந்த மாயாண்டி (65) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.