ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் என்.ஜி.ஓ நகரில் காந்திசாந்தகிரன் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செந்தில் குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காந்திசாந்தகிரன் மன உளைச்சலில் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் காந்திசாந்தகிரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.