கேரளாவில் மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்த வழக்கில் கொடூர கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூரஜ் (27).. தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு உத்ரா (25) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் சூரஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.
இதனால் கணவன் – மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மார்ச் 2-ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியில் உத்ராவை ஒரு பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல நாட்கள் போராடி ஏப்ரல் 22 அன்று உத்ரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் அவரது பெற்றோர் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் மே 7-ஆம் தேதி உத்ரா தனது பெற்றோர் வீட்டில் எந்த அசைவுமின்றி பிணமாக கிடந்தார். இதை பார்த்த உத்ராவின் தந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து விட்டதால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர் படுக்கையறையில் தேடிப் பார்த்தபோது அலமாரியின் கீழ் ஒரு விஷப் பாம்பு இருந்தது. அந்த பாம்பை அவர்கள் அடித்துக் கொன்றனர். பிறகு தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உத்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சூரஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. மனைவியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக யூடியூபில் தேடியுள்ளார். அப்போது ஒரு பாம்பாட்டி உடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாம்பாட்டிக்கு பணம் கொடுத்து ஒரு பாம்பை ஏற்பாடு செய்துள்ளார்.
முதல் முயற்சி தோல்வியுற்றது. இதனால் மீண்டும் மற்றொரு விஷ பாம்பை 10,000 ரூபாய்க்கு வாங்கி உத்ராவின் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அந்த பாம்பு உத்தராவை இரண்டு முறை கடித்ததால் அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் நடந்த போது சூரஜ் எதுவும் நடக்காததுபோல் கதறி அழுது நாடகம் ஆடியுள்ளார். தனது மனைவியை கொலை செய்வதற்கு இரண்டு முறை முயற்சி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கேரளா சிறப்பு நீதிமன்றம் உத்ராவை பாம்பை பயன்படுத்தி கொலை செய்த கணவரை குற்றவாளி என்று சமீபத்தில் தீர்ப்பளித்தனர். இந்நிலையில் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாம்பை விட்டு கடிக்க செய்த வழக்கில் கணவர் சூரஜ் குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 17ஆண்டு கடுங்காவல் தண்டணையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது கொல்லம் நீதிமன்றம்..