மனைவி உயிரிழந்ததால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது 2 பிள்ளைகளையும் அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எட்டிமடைபுதூரில் வாடகை வீட்டில் வசித்து கட்டிட தொழில் செய்து வந்துள்ளார்.
இதனைதொடர்ந்து வீட்டில் தனியாக இருந்ததால் முருகன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று வாழ்வில் விரக்தி அடைந்த முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த திருச்செங்கோடு காவல்துறையினர் முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.