பேருந்து ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அன்னை சத்யா நகர் பகுதியில் ஜெயக்குமார்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சோளிங்கரில் இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமாருக்கு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தனுஷ்கா(9) என்ற மகளும், ராகேஷ்(2) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற தீபா இதுவரை கணவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை இந்நிலையில் ஜெயக்குமார் மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது தீபா மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த ஜெயக்குமார் வீட்டிற்கு வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் மனைவியின் வீட்டார் தன்னை தாக்கியதை நினைத்து மன உளைச்சலில் இருந்த ஜெயக்குமார் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.