மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு ஐந்து வருடங்களில் தனது ஐந்து குழந்தைகளை தந்தை கொன்ற சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ஜும்மா. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ம் தேதி இவரது இரண்டு மகள்கள் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், கிராமத்தின் அருகே ஹன்சி-புட்டானா கால்வாயில் இருந்து ஒரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கிராமத்திற்கு வெளியே இன்னொரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் கிராம பஞ்சாயத்தில் ஜும்மா, தனது இரு மகள்களையும் கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மூத்த மகனை கொலை செய்துள்ளார்.
இதேபோல், தனது மற்றொரு மகன் மற்றும் மகளையும் அவர் இவ்வாறு கொலை செய்துள்ளார். வறுமையின் காரணமாக இந்த கொலைகளை செய்தேன் என அவர் பஞ்சாயத்தில் கூறியுள்ளார். இதைக் கேட்டு கூடியிருந்த கிராம மக்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். பின்பு போலீசாரிடம் தகவல் கொடுக்கப்பட்டு ஜும்மா என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் மந்திரவாதி ஒருவர் இவ்வாறு கூறியதன் பின்னரே இந்த கொலைகளை செய்தேன் என ஜும்மா கூறியுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.