நாமக்கல் மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டும் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுகிழமை ஊரடங்கு என்பதாலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் பகுதியில் விடுமுறை தினத்தில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் பரமத்திவேலூர் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த குச்சி பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், கோகுல், பாலப்பட்டியை சேர்ந்த சுரேஷ் மற்றும் மேட்டூரை சேர்ந்த மூர்த்தி, மோகன்குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 223 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.