சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என ஒட்டுமொத்த தென் தமிழகத்துக்கும் மருத்துவ தலைநகரமாக விளங்கக்கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இந்த கட்டிடம் 1984-ல் கட்டப்பட்டது. சில வருடங்களாக கட்டிடத்தின் சுவர் பகுதிகளில் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு 90-வது வார்டின் ஆப்பரேஷன் தியேட்டர் மேற்கூரையின் சிமென்ட் பெயர்ந்து விழுந்தது. இதனால் ஆப்பரேஷன் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த லேப்ராஸ்கோப், மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்து விட்டது.
மேலும் குழந்தைகள் நல வார்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கூரை சிமென்ட் பூச்சு விழுவது தொடர்கதையாக இருக்கிறது. அத்துடன் குழந்தைகள் வார்டுகளில் நீர்க் கசிவு ஏற்பட்டு சுவர்களில் எந்த நேரமும் ஈரம் படர்ந்து காணப்படுகிறது. 90-வது வார்டை இடித்துவிட்டு கட்ட வேண்டும் எனில் அந்த வார்டை வேறு எங்காவது மாற்ற வேண்டும். அதேபோன்று குழந்தைகள் நல வார்டையும் உடனே தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி புது கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.