டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் வனப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு பின்னர் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த தொகையை திரும்பி வழங்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளது. காலி மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. தவறினால் மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் வரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப் பட்டுள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் காலி பாட்டில்கள் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கின்றன. இதையடுத்து இந்தத் திட்டத்தை எதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து வனப் பகுதிகள் மற்றும் மலை வாசஸ்தலங்களில் அமல்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் மேலாளர் அதிரடி சோதனை மேற்கொள்ளுமாறும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வனப் பகுதிகளை ஆக்கிரமித்து உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளனர்.