விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் டிப்பர் லாரிகளில் எந்திரங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது என்றும், மணல் குவாரி உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் உதவி மாவட்ட ஆட்சியர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்கினர். இதுகுறித்து உதவி மாவட்ட ஆட்சியர் விளாத்திகுளம் தாசில்தார் மற்றும் அதிகாரிகளை நேரில் அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.