பத்திரிகையாளர்கள் என்று கூறிவிட்டு மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் செய்தியாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்வதாக மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது சில மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும்.
அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக செய்தியாளர்கள் என்று கூறிவிட்டு சிலர் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். அதோடு அரசு பணியில் இருப்பவர்களிடம் அவர்களை வேலை செய்ய விடாமல் பிறரின் கோரிக்கை மனுக்களை செய்தியாளர்கள் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக அரசு அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் செய்தியாளர்கள் என்ற பெயரில் யாரேனும் மோசடி வேலையில் ஈடுபட்டால் 9498042423 என்ற whatsapp எண்ணிற்கு ஆதாரத்துடன் குறுந்தகவல் அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.