இந்த நுாற்றாண்டின் இறுதியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகமான வெப்பநிலை என்ற பாதிப்பு 3மடங்கு வரையிலும் அதிகரிக்கும் என அமெரிக்க நாட்டின் ஹார்வர்டுபல்கலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சித்துறை விஞ்ஞானியான லுாக்காஸ் வர்காஸ் ஜெப்படெல்லோ கூறியிருப்பதாவது “உலகின் வெப்ப மாறுபாடு தொடர்பாக தீவிர ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் தீவிர ஆபத்து விளைவிக்கக்கூடிய வெப்பகுறியீடான 124 டிகிரி பாரன் ஹீட் வருங்காலத்தில் பதிவாக வாய்ப்பு இருக்கிறது. சென்ற 1979-1998 வரை உலகநாடுகளில் பதிவான வெப்பநிலையை அடிப்படையாக வைத்து 2050 மற்றும் 2100 ஆகிய வருடங்களில் எவ்வாறு பதிவாகும் என ஆராயப்பட்டது.
அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் 1979- – 1998 -வரை 4 முறைதான் 103 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. ஆனால் இந்த நுாற்றாண்டு இறுதியில் வருடத்திற்கு 11முறை அதீதவெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. இந்தியா உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில், இந்த நுாற்றாண்டின் இறுதியில் இந்த அதீத வெப்ப நிலையானது வருடத்திற்கு 1 முதல் 4 வாரங்கள் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். பருவகால மாற்றத்தின் 4 விளைவுகளில் வெப்ப அலைகள் முக்கிய ஒன்றாகும்.
கடல் நீர்மட்டம் அதிகரித்தல், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உயிரினங்களின் சூழலியல் மாற்றம் போன்றவற்றால் வெப்ப நிலை உயருகிறது” என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து மற்றொரு விஞ்ஞானி ஜெனிபர் பிரான்சிஸ் கூறியிருப்பதாவது “பேராசிரியர் ஜெப்படெல்லாவின் கணிப்புகள் முற்றிலும் நம்பத் தகுந்தவை ஆகும். எதிர்கால சந்ததி கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டும். பருவ கால மாற்றங்கள் குறித்து உலகநாடுகள் கவலை கொண்டாலும் பல நாடுகள் அதற்கு நிதிஒதுக்கீடு செய்ய தயாராக இல்லை என்பது வேதனையான ஒன்றாகும். இந்தியா உட்பட வளர்ந்துவரும் நாடுகள் பருவகால மாறுபாடு தொடர்பாக பல மாநாடுகளில் சுட்டிக் காட்டியுள்ளது. பொதுமக்களும் வெப்பநிலையை கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.