பெண் தனது 2 மகள்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் நேற்று தனது இரண்டு மகளுடன் சென்று திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசாரிடம் அந்த பெண் கூறியதாவது, எனது பெயர் சுபலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. எங்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு விபத்தில் எனது கணவர் இறந்து விட்டதால் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் எனது மகள்களுடன் வசித்து வருகிறேன். எனது கணவரின் தம்பி இளங்கோவன் என்பவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் எனது மாமியார் பெயரில் 5 சென்ட் இடத்துடன் வீடு இருக்கிறது. அதனை இளங்கோவனின் பெயருக்கு மாற்றியதாக கூறினர். தற்போது மாமியார், கணவர், கணவரின் தம்பி மூன்று பேரும் இறந்துவிட்டனர். இளங்கோவனின் மனைவி வீட்டை பூட்டி விட்டு நீலகிரிக்கு சென்று விட்டார். தற்போது இரண்டு மகள்களுடன் நான் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே மாமியார் பெயரில் இருக்கும் வீட்டில் எனது கணவருக்கு உரிய பங்கை கேட்டபோது இளங்கோவனின் மனைவி என்னை திட்டி மிரட்டல் விடுக்கிறார். எனவே எனக்குரிய பங்கை கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.