கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனைசெய்த விவசாயி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கல்லட்டிலிருந்து ஊட்டியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது கல்லடியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுவது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் 2 வாலிபர்களையும் அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி குணசேகரன் என்பவர் தனது நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் குணசேகரனுக்கு கஞ்சா பிடிக்கும் பழக்கம் இருப்பதால் அவரே சொந்த தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவ்வபோது கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்த நிலையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குணசேகரன், விஷ்ணு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குணசேகரன் மற்றும் விஷ்ணுவை கோவை மத்திய சிறையிலும், சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்துள்ளனர்.