துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு 1 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி தீபக் சிவாஜ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துறைமுக பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பாம்பன் பகுதியை சேர்ந்த தஷ்மன்(27) என்பவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவரிடம் சுமார் 1 கோடி மதிப்புள்ள போதை பொருள் இருந்துள்ளது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இந்த போதை பொருளை கொடுத்தது தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த பிரைட்வின் என்பது தெரியவந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து கைதான 2 பேரிடம் போதைப்பொருள் எப்படி கிடைத்தது? இலங்கையில் யாரிடம் விற்பனை செய்ய சென்றீர்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.