போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் எனப்படும் காவல் நிலைய ஆணையம், போலீசார் யார் யாருக்கு சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அதன்படி குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், கேபினெட் அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு தான் போலீஸ் அதிகாரிகள் கட்டாயமாக சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவர்கள் மட்டுமின்றி காவல்துறையில் தங்களுடைய உயரதிகாரிகளுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்ய வேண்டும் என ஆணை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி – டிஐஜிக்கும், டிஐஜி – ஐஜிக்கும், ஐஜி – ஏடிஜிபிக்கும், ஏடிஜிபி- டிஜிபிக்கும் சல்யூட் அடித்து மரியாதை செய்ய வேண்டும் என்பது விதிமுறைகளில் ஒன்றாகும். ஆனால் சாலைகளில் போக்குவரத்து பணிகளில் இருக்கும் காவலர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் யாருக்கும் சல்யூட் அடிக்க தேவையில்லை என விதிகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கையை அசைத்து போக்குவரத்தைக் கண்காணிக்கும் போது அவர்கள் உயர் அதிகாரிகளுக்கும் விஐபிகளுக்கும் மரியாதை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. காவல் நிலை ஆணை விதிகளில் எந்த இடத்திலும் போலீசார் சட்டமன்ற உறுப்பினருக்கும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருக்கும், மாநிலங்களவை உறுப்பினருக்கும் சல்யூட் அடித்து மரியாதை செய்ய வேண்டும் என குறிப்பிடப்படவில்லை என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.