விற்பனைக்காக வைத்திருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில் மலை அடிவாரத்தில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டை சோதனை செய்துள்ளனர். அந்த சாக்குமூட்டையில் 21 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் கஞ்சா வைத்திருந்த பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியை சேர்ந்த ராம்குமார், பிரபாகரன் ஆகிய 2 வாலிபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனையில் கைலசபட்டி சேர்ந்த கங்காதர் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான கங்காதரனை தேடி வருகின்றனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 23 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.