டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் நம்ரா காதிர் (22). இவருடைய கணவர் மணீஷ் (எ)விராட் பெனிவால் ஆவார். இதில் நம்ரா யூ-டியூப்பில் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு 6.17 லட்சம் பாலோவர்ஸ் இருக்கின்றனர். இந்நிலையில் பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரான தினேஷ் யாதவ் (21) என்ற வாலிபர், நம்ரா மீது புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
அதாவது, தினேஷ் சில மாதங்களுக்கு முன் நம்ராவை ஏதோ ஒரு அடிப்படையில் தொடர்புகொண்டுள்ளார். நம்ராவின் சேனலில் தன் விளம்பர நிறுவனம் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என தினேஷ் கேட்டுள்ளார். அதற்கு நம்ரா ரூபாய்.2 லட்சம் தரும்மாறு கூறியுள்ளார். இதனால் தினேசும் அந்த பணத்தை கொடுத்துள்ளார். அதன்பின் நம்ரா ரூபாய்.50 ஆயிரம் கேட்டு வாங்கியுள்ளார். ஒருசில நாட்கள் கடந்த பின் விளம்பர வேலை எதுவும் நடைபெறாத நிலையில், நம்ராவிடம் தினேஷ் அதுகுறித்து கேட்டுள்ளார்.
எனினும் அதற்கு நம்ரா தினேசை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நம்ரா மற்றும் அவரது கணவர் மணீஷ் உடன் சேர்ந்து தினேஷ் கிளப் ஒன்றில் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார். பின் அவர்கள் இரவில் அறை எடுத்து தங்கி உள்ளனர். மறுநாள் காலையில் எழுந்த தினேஷிடம் அவரது வங்கி அட்டைகள் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை நம்ரா கேட்டுள்ளார். அதனை தராவிட்டால் போலியான பலாத்கார வழக்குப்பதிவு செய்வேன் என நம்ரா மிரட்டியுள்ளார்.
அதன்பின் தொடர்ந்து மிரட்டி ரூபாய்.80 லட்சத்திற்கும் கூடுதலாக பணம் மற்றும் பரிசுப்பொருட்களை தினேஷிடம் இருந்து நம்ரா கறந்துள்ளார். ஒருக்கட்டத்தில் ரூபாய்.5 லட்சம் தொகையை தன் தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து தினேஷ் எடுத்துள்ளார். அவ்வளவு பணம் எதற்க்காக என தினேஷின் தந்தை கேட்டதும், உண்மையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் நம்ராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மணீஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ரூபாய்.80 லட்சம் பணம், பரிசுப்பொருட்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.