பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசு பொருட்களை ரேஷன் கடை மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவை வழங்கப்பட உள்ளது.
20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த தொகுப்புடன் கரும்பு வழங்குவதற்கு 71 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்க உள்ள 20 இலவச பொருட்கள் கொண்ட துணிப்பையில் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்ற வாழ்த்துக்களும், சூரியன், பொங்க பானை, கரும்பு போன்ற படங்களும் இடம் பெற்றுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் படம் இடம்பெறாமல் அச்சிடப்பட்டுள்ளது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.