சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் அவர்கள் துண்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதன் காரணமாக துண்டு உற்பத்தி அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் துண்டுகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது.
இதன் காரணமாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி தேக்கமடைந்துள்ளதாக விசைத்தறி சங்கம் முன்னாள் பொருளாளர் சிங்காரம் தெரிவித்துள்ளார். எனவே விசைத்தறி தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு அதனை கொள்முதல் செய்து பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு துண்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் உயரும் என்றும் கூறியுள்ளனர்.