அமெரிக்க போர் விமானங்கள் சிரியாவில் இருக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற போராளிகள் மீது குண்டு வீசி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை இதுபற்றிக் கூறுகையில் , ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் ஜோ பைடனின் உத்தரவினாலே ராணுவ படைகள் சிரியாவில் உள்ள குழுக்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதியளித்துள்ளது.
தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டதில், போராளி குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த Kata’ib Hezbollah மற்றும் Kata’ib Sayyid al -Shuhada பல தளங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 3 லாரிகள் மற்றும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான இங்கிலாந்தை தளமாக கொண்ட சிரிய கண்காணிப்பு குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான், குறைந்தது 17 போராளிகள் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளார்.