சென்னை எழும்பூரிலிருந்து,மதுரை செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வால்டாக்ஸ் சாலை நிறுத்தத்திலிருந்து வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக நேற்று வந்தது. ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் உடைமைகளை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு காற்றில் ஆடியபடி தொங்கிக்கொண்டிருந்தது. அதன்பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்து செல்லும்போது ஆம்னி பேருந்தில் தொங்கிய கயிறு பக்கத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் சிக்கிக்கொண்டது.
அந்த பிடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தரதரவென்று கொஞ்ச தூரம் இழுத்துச் செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து அதிலிருந்த கயிறு விலகி இன்னொரு மோட்டார் சைக்கிளை இழுத்துக்கொண்டு சென்றது. அந்த கயிறின் பிடி விலகியதால் மோட்டார் சைக்கிளின் நிலை தடுமாறி சாலையில் விழுந்தன. மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய இரண்டு பேரும் காயமடைந்தனர்.
இதற்கிடையில் மூன்றாவதாக காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம், ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் கயிறு மாட்டியது. கயிறு மாட்டியதால் மோட்டார் சைக்கிள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால் ஜோதி ராமலிங்கத்திற்கு படுகாயம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஆம்னி பேருந்தில் தங்கிய கயிறு ஈ.வி.கே.எஸ் சம்பத் சாலை சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் அமர்ந்திருந்த இரும்பு தடுப்பில் மாட்டிக்கொண்டதால், அங்கு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆதிசேஷனை இழுத்துச்சென்று சாலையில் தள்ளியுள்ளது.
இதன் பின்னர் கயிறு அறுந்ததால் ஆதிசேஷனுக்கு பெரிய ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று வேப்பேரியில் போக்குவரத்து பாதிப்பு சிறிது நேரம் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்தில் ஆபத்தான வகையில் தொங்கிய கயிற்றினால், 3 மோட்டார் சைக்கிள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் என 4 பேரையும் காயப்படுத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டன. இதுதொடர்பாக ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் பரமேஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.