தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரண்டு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர் பேராசிரியர் அன்பழகன். இவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி காலங்களில் மக்கள் நல வாழ்வு துறை, கல்வித்துறை, நிதித்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளுக்கும் அமைச்சராக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை திறம்பட நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதி துறை வளாகத்தில் அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின் கருவுலக கணக்கு தொடர்பான அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டி அவரின் குடும்பத்தினருக்கு 7,500 கோடி ரூபாய் மதிப்பில் “அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்” நேற்று அறிவித்துள்ளார். இதனையடுத்து அன்பழகனாரின் நூற்றாண்டு நிறைவை போற்றும் விதமாக இந்த வருடம் 19.12.2022 அன்று பள்ளி கல்வித்துறை டி.பி.ஐ வளாகத்தில் அன்பழகனின் திருவுருவ சிலை நிறுவி அந்த வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும். மேலும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி.
மேலும் தி.மு.க தலைமை சார்பாக டிசம்பர் 15-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 பொது கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர் 17-ஆம் தேதி அன்பழகன் பொது வாழ்வை போற்றிடும் கவியரங்கம் நடைபெறும். மேலும் டிசம்பர் 18-ஆம் தேதி வட சென்னையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.