Categories
மாநில செய்திகள்

“பேரறிவாளன் விடுதலை”…. 31 வருட வழக்கின் கதை…. கைது முதல் விடுதலை வரை…. இதோ ஒரு தொகுப்பு…..!!!!

பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில்  சுப்ரீம்கோர்ட்  நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் போன்றோர் இன்று தீர்ப்பு வழங்கினர். 30 வருடங்களுக்கு மேல் சிறைவாசத்தை அனுபவித்த சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதாவது சுப்ரீம்கோர்ட்  தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் 142வது பிரிவைச் செயல்படுத்தி விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் சுப்ரீம்கோர்ட்  இதுபோன்ற தீர்ப்பை வழங்குவது மிக அரிதாகும். நீதிபதிகளின் தீர்ப்பில், இந்த வழக்கில் கவர்னர்செய்த காலதாமதமானது நீதிமன்றம் பரிசீலனைக்கு உட்பட்டதாகும். அவரது விடுதலை குறித்து கவர்னர்  முடிவெடுக்காமல் காலம்தாழ்த்தியது. சுமார் 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறாகும். இதன் காரணமாக அவரை விடுதலை செய்கிறோம் என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பேரறிவாளன் விடுதலையின் இத்தீர்ப்பு எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். இது காலதாமதமாக இருந்தாலும் மகிழ்ச்சி என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். சென்ற 1991 ஆம் வருடம் மே 21ஆம் தேதி ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு வாயிலாக கொல்லப்பட்டார். இவ்வழக்கில் 1991-ம் வருடம் ஜூன்மாதம் 11ம் தேதியன்று பேரறிவாளன் கைதானார். இப்படுகொலை பற்றி விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்றமானது, நளினி, முருகன், பேரறிவாளன்உட்பட 26 பேருக்கும் 1998-ம் வருடம் ஜனவரி 28ஆம் தேதி தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவ்வாறு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1999ஆம் வருடம் மே 11ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன்,நளினி போன்ற 4 பேருக்கு மட்டும் தூக்குதண்டனையை சுப்ரீம்கோர்ட்டு  உறுதிசெய்தது. தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என கோரி 4 பேரும் தாக்கல் செய்த மறுஆய்வு மனு கடந்த 1999-ஆம் வருடம் அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில்  தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் கருணை மனுக்களை கவர்னர்  பாத்திமா பீவி சென்ற 1999-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். அப்போது கவர்னரின்  உத்தரவை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட் அமைச்சரவை முடிவின் மீதே கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. அதன்பின் கடந்த 2000ஆம் வருடம் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் வாயிலாக நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பேரறிவாளன்,சாந்தன் மற்றும் முருகன் ஆகிய 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணைமனுக்களை அனுப்பி வைத்தனர். கடந்த 2000ஆம் வருடம் முதல் 2007 ஆம் ஆண்டு வரை அப்போதைய ஜனாதிபதி நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். பின் பதவியேற்ற ஜனாதிபதி  பிரதீபா பாட்டில் சென்ற 2011-ஆம் வருடம் இவர்களின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். 11 வருடங்களுக்கு மேலாக கருணை மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 3 பேரையும் தூக்கிலிட தடை விதித்தது.
அடுத்ததாக இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. கடந்த 2014 பிப்ரவரி 18ஆம் தேதி சுப்ரீம்கோர்ட்டில்  சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழகஅரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டை அணுகி மத்திய அரசானது தடையாணை பெற்றது. இவ்வழக்கு மத்திய-மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. பின் இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அமர்வு, எழுவரையும் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என அறிவித்தது. இதன்பின் 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இதற்கிடையே சுப்ரீம்கோர்ட்டில் இவ்வழக்கை விசாரித்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூவர் அமர்வு 7 பேரை விடுவிப்பது குறித்து 161வது பிரிவின் கீழ் கவர்னர்  முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து 7 நபர்களையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு பரிந்துரை செய்தது. இந்தநிலையில் சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக்குறைவால் பரோலில் வந்த பேரறிவாளன் தொடர் சிகிச்சை பெற வேண்டி 10-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது. கடந்த மார்ச் 9 ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதனைத் தொடர்ந்து இப்போது தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை சுப்ரீம்கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. அவற்றில் பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும் எனவும் விசாரணை வரம்பு தமிழக எல்லையில் இருப்பதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே இருக்கிறது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி கவர்னரின்  சிறப்பு அதிகாரமான 161ன் கீழ் முடிவெடுக்க எத்தடையும் இல்லை எனவும் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு விடுதலை குறித்த தீர்ப்புதகவல் அறிந்து பேரறிவாளன் மற்றும் அவருடைய தாய் அற்புதம்மாள் 31 வருடகால வேதனையின் தழும்புகளை ஆனந்தகண்ணீர் வாயிலாக வெளிப்படுத்தினர். அறையில் இருந்த பேரறிவாளனின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழ் அமைப்பினரும் அவரோடு இணைந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அடிப்படையில் ஆனந்த கண்ணீர் சிந்தினர். மேலும் பேரறிவாளனை கட்டி அணைத்தவாறு உறவினர் ஒருவர் பேரறிவாளன் மார்பில்சாய்ந்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Categories

Tech |