வீடு கட்டுமான பணியில் சன்ஷேடு சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காமராஜர் சாலை பகுதியில் வசித்து வருபவர் கருணாகரன். இவர் வீட்டில் முதல், 2வது மாடி கட்டும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், சன்ஷேடு அமைக்கும் பணியில் கும்பகோணத்தை அடுத்த திருவாடுதுறை பகுதியில் வசித்த சந்திரமோகன், சுரேஷ், 45 வயதுடைய கார்த்திக், 55 வயதுடைய ஜாகிர் உசேன் உட்பட 4 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது நேற்று மாலை 4 மணிக்கு திடீரென்று பயங்கர சத்தத்தில் புதிதாக கட்டப்பட்ட சன்ஷேடு விழுந்ததில் கார்த்திக், ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்கள். மேலும் சுரேஷ், சந்திரமோகன் ஆகிய இருவருக்கும் சிறுகாயம் ஏற்பட்டு உயிர் பிழைத்தனர். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல்துறையினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதி நவீன இயந்திரங்களின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன்பின் தீயணைப்பு வீரர்கள் கயிறுகளை கட்டி அந்தரத்தில் தொங்கியபடி இருவரின் மேல் விழுந்த கான்க்ரீட் சுவர்களை ஒரு மணி நேரம் போராடி உடைத்தார்கள். இதனை அடுத்து இடிபாடுகளில் உயிருக்கு போராடிய ஜாகிர் உசேனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி தவித்த கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதில் இறந்த கார்த்திக்கிற்கு திருமணமாகி மனைவி, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.