Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவரிடம் தங்க நகை பறிப்பு… 3 வாலிபர் கைது…!!!

பெண் மருத்துவரிடம் நகையை பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், காரமடை காந்திநகரில் வசித்து வருபவர் ராம் தீபிகா(36). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 24 -ஆம் தேதி அன்று மதியம் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டியில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் 3 வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றார்கள்.

அப்போது திடீரென்று அவர் அணிந்து இருந்த 14 1/2 பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் தீபிகா காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, கோவை, விளாங்குறிச்சியில் தங்கியுள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்த 22 வயதுடைய ரஞ்சித்குமார், 20 வயதுடைய அஜித்குமார், கோவை சித்ரா பகுதியில் வசித்த 23 வயதுடைய அபிஷேக் குமார் ஆகியோர் நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, நகை பறிப்புக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேர்கள் மீது ஏற்கனவே சரவணம்பட்டி, அன்னூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |