வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கஸ்தம்பாடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாம்ராஜ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சாம்ராஜும் பதினொன்றாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் சாம்ராஜை கண்டித்தனர். இதனை அடுத்து பெற்றோர் சொல்லும் உறவினர் மகனையே திருமணம் செய்து கொள்வதாக மாணவி தனது காதலனிடம் தெரிவித்து அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இதனால் சாம்ராஜ் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் காதலி வீட்டிற்கு சென்று பெண் கேட்டபோது அவர்கள் சாம்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.