பெண் குழந்தை பிறந்த சந்தோசத்தில், தந்தை குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷெல்காவோன் என்ற பகுதியைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் விஷால் ஜரேகர். இவரது மனைவிக்கு, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் பின் பிரசவத்திற்கு பிறகு, போசாரி என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விஷால் ஜரேகரின் மனைவி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தங்களது குடும்பத்தில் பெண் குழந்தையே பல தலைமுறைகளாக இல்லை என்றும், முதன்முறையாக பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக,குழந்தையை போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு, 1 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, விஷால் ஜரேகர் அழைத்து வந்துள்ளார்.
மேலும் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக தனது விவசாய நிலத்திலே தற்காலிக ஹெலிபேடும் அமைத்திருந்தார். இந்நிகழ்வை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்துள்ளனர். மேலும், இது குறித்து குழந்தையின் தந்தை விஷால் ஜரேகர் கூறியுள்ளதாவது, எங்கள் மொத்த குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தை கூட இல்லை. அதனால், என் மகளை வீட்டிற்கு சிறப்பாக வரவேற்று வர வேண்டும் என நினைத்தேன். இந்நிலையில், ஹெலிகாப்டரை ரூ.1 லட்சத்திற்கு, வாடகைக்கு எடுத்து அதில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறியுள்ளார்.