பீகார் மாநிலத்தில் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு கல்வி உதவித் தொகையை 50 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் பெண் குழந்தைகளின் திருமணத்தை தவிர்ப்பதற்கும் பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் பீகார் மாநிலத்தில் கன்யா உத்தன் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் பட்டப் படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வருடம் பெண்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தின் இந்த திட்டத்தின் மூலம் 1.6 கோடிப் பெண்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.