நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. அதன்படி சாதாரண பெட்ரோல் ரூ.99.95, பிரீமியம் பெட்ரோல் ரூ.103- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, லடாக் மற்றும் கர்நாடகாவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதித்தாலும், கொரோனா தடுப்பூசிகாக ஆண்டு ஒன்றுக்கு 35 ஆயிரம் கோடி அரசு செலவிடுவதை மக்கள் உணர வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் வழியில் கிடைக்கும் பணம் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்படுவதாக அவர் கூறியுள்ளார்.