கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியிருப்பதாவது “கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வருடத்தில் 2,866 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், ரத்தம் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 21 ஆயிரம் பணியாளர்கள் கொசுஒழிப்பு பணியில் தினசரி ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கொசுப்புகை எந்திரம் மற்றும் பூச்சுக்கொல்லிகள் போதியஅளவு கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மலேரியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு வருடமும் குறைந்துக்கொண்டு வருகிறது. இந்த வருடம் இதுவரையிலும் 140 நபர்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மலேரியா தொற்று இல்லாதநிலை இருக்கிறது. மலேரியா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களாக சென்னை, ராமநாதபுரம், தர்மபுரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி போன்றவை இருக்கிறது.
இந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைக் கால் நோயை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து இருக்கிறது. தமிழக அரசு யானைக் கால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கி வருகிறது. இதுவரையிலும் 8,023 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். ரூபாய் 9.63 கோடி இத்திட்டத்திற்காக செலவிடப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் 13 நபர்கள் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய்க்கான தடுப்பூசியானது கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், மதுரை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர் மற்றும் திருவள்ளூர் போன்ற 14 மாவட்டங்களில் செலுத்தப்படுகிறது.
9 -12 மாத குழந்தைகளுக்கு முதல்தவணை தடுப்பூசியும், 16 -24 மாத குழந்தைகளுக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இப்பணி 90 சதவீதத்துக்கு மேல் முடிக்கப்பட்டு இருக்கிறது. ஆகமொத்தம் மழைபருவ காலம் துவங்குவதற்கு முன்னதாகவே கொசுக்களின் வாயிலாக பரவும் நோய்களுக்கு எதிராக அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 6ஆம் தேதியின் நிலவரப்படி தமிழகத்தில் 78 லட்சத்து 78 ஆயிரத்து 980 தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் 35.52 லட்சம் தடுப்பூசிகள் காலாவதி ஆகும் நிலையில் இருக்கிறது. ஆகவே இந்த தடுப்பூசிகள் வீணாவதை தடுப்பதற்கு மத்திய அரசு 18 -59 வயது வரை இருப்பவர்களுக்கு தனியார் கொரோனா தடுப்பூசி மையத்தை தவிர்த்து அரசு கொரோனா தடுப்பூசி மையத்திலேயே இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட அனுமதிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.