அலங்கார மின்விளக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வ.உ.சி நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சபரி நேரு நகரில் உள்ள ஒரு இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடையில் ஆயுதபூஜை விழாவை கொண்டடுவாதர்க்காக கடையை சுத்தம் செய்து அலங்கார விளக்குகளை மாட்டியுள்ளார். இதனையடுத்து இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல கடையை மூட முயன்றுள்ளார். அப்போது அலங்காரத்திற்கு பொருத்தப்பட்ட மின்விளக்கின் வயர் எதிர்பாரதவிதமாக கடையின் ஷட்டர் மீது உரசியுள்ளது.
இந்நிலையில் சபரி ஷட்டர் மீது கைவைத்த போது மின்சாரம் அவர் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சபரியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சபரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.