ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்வாமாவின் கடூரா பகுதியில் வெளியூர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையடி குண்டுகளை வீசியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறது என காஷ்மீர் மண்டலம் காவல்துறை கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னர் மனோஜ் சின்ஹா கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது கோழைத்தனமான தாக்குதல் என விமர்சித்த அவர் இந்த குற்றச்செயல் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இந்த கொடூர தாக்குதலில் பலியான தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். புல்வாமா மாவட்டத்தில் நேற்று இரவு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பலியான தொழிலாளி முகமது மும்தாஜ் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பேரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் அவர்கள் அனைவரும் புல்வாமா தாக்குதல் பகுதியில் பணிபுரிந்து வந்த நிலையில் இந்த திடீர் தாக்குதலில் சிக்கிக் கொண்டுள்ளனர்.