Categories
மாநில செய்திகள்

புரட்டாசி மாத கடைசி சனிக்‍கிழமை – தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்‍கடன்

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவராஜ சுவாமி கோவில், தேரடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பச்சை வண்ண பவளவண்ண திருக்கோவில் ஆகியவற்றில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். நந்தம்பாக்கம் கோதண்டராமன் கோவில் நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜையும், ஆராதனையும் நடத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏழைகளின் தென் திருப்பதி என அழைக்கப்படும் அரியலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை இந்நிலையில் அரியலூர் நகரிலுள்ள கோதண்டராம ஸ்வாமி கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே திண்டுக்கல் அருகே டிபனை பட்டியில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோவில் விழாவிற்காக ஆண்டுதோறும் கன்னிவாடி ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் 48 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்து புரட்டாசி கடைசி சனிக்கிழமை நேர்த்தி கடன் செலுத்துவர். அந்தவகையில் இன்று பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் நேர்த்திகடன் செலுத்தினர்.

Categories

Tech |