டெல்லி மற்றும் கேரளாவில் கொரோனாவை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரை பகுதிகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நாளை இரவு 10 மணிக்கு மேல் பார்களை மூடவும், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் பைக் ரேஸ் மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள மேம்பாலங்கள் மூடப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனையடுத்து டெல்லி மற்றும் கேரளாவில் கொரோனாவை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. டெல்லியில் இரண்டு நாட்களிலும் இரவு நேர ஊரடங்கு போது பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இன்று இரவு 10 மணிக்கு மேல் அனைத்து கொண்டாட்டங்களும் நடைபெறக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.