நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்த போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுதும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 15ம் தேதி வரை 77 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆக குறைந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 1809 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், புதுச்சேரியில் 23 பேர், காரைக்காலில் 6, ஏனாம், மாகி ஆகிய பிராந்தியங்களில் தலா ஒருவர் என மொத்தம் 31 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை 100 ஆக உயர்ந்து உள்ளது அவர்களில் ஒருவர் ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த 15ஆம் தேதி 1.05% இருந்த கொரோனா தொற்று ஒரே நாளில் 1.71% உயர்ந்து உள்ளது. எனவே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.