யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கொப்பையூர் ஆதிவாசி இருளர் பழங்குடி இன கிராமத்தில் கூலித் தொழிலாளியான பெருமாள்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாளின் மனைவி இறந்துவிட்டார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பெருமாள் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் கடைசி பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து வனப்பகுதி வழியாக பெருமாள் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த யானை பெருமாளை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதனால் பெருமாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
நேற்று காலை அவ்வழியாக நடந்து சென்றவர்கள் பெருமாள் இறந்து கிடந்ததை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவல்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பெருமாளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆதிவாசி கிராமத்திற்குள் யானை வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.