தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆச அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறலாம், அவை மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் தடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்
மேலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்பதைப் போல ஆலோசனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை மூலம் வழங்கி கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தும் வகையில் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தலாம். தமிழகத்தில் மஞ்சப்பை திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாற்றுப் பொருட்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி பள்ளி மற்றும் கல்லூரிகளை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உணர்வதாகவும் அதனை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் மட்டும் தான் தற்போது அமலில் உள்ளதே தவிர பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு விட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை யார் உறுதி செய்வார்கள், யார் பொறுப்பான அதிகாரி என தெரிவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் பிளாஸ்டிக்கை முழுமையாக தடைசெய்யும் திட்டம் உள்ளதா அல்லது உற்பத்தியை அனுமதித்து விட்டு அதை புழக்கத்தில் விட்ட பிறகு மேலாண்மை செய்வதற்கு மட்டும் திட்டம் உள்ளதா என மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டது.