சென்னை மாவட்டத்தில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் தனது மனைவி திவ்யா, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் காரில் தேனாம்பேட்டையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த காரை திவ்யா ஓட்டினார். இந்நிலையில் கிண்டி நோக்கி செல்லும் கத்திப்பாரா மேம்பால சாலையில் சென்ற போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா உள்பட அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.