மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் அகன்ஷா மோகன் (30) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் மாடலிங் செய்து வருவதோடு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 16-ஆம் தேதி ரிலீசான சியா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில், திடீரென தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அகன்ஷா நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் ரூமுக்குள் சென்று பார்த்த போது அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடிகையின் அறையில் ஒரு கடிதமும் கிடைத்தது. அதில் என்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை தயவு செய்து யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.